Showing posts with label உயிரோசை. Show all posts
Showing posts with label உயிரோசை. Show all posts

Monday, September 27, 2010

ஆசைப் பூனை

(2010 செப்டம்பர் 13-ம் தேதியன்றைய உயிரோசை டாட் காமில் வெளியான கவிதை இது)
---------------------------------



















குறுக்கே போனால் அபசகுனம்,
ஒற்றை ரோமம் உதிர்ந்தால்
ஓராயிரம் பவுன்தான் மாற்று...
என்ற எச்சரிக்கைகள் மீறிய ஆசைதான்
பூனை வளர்க்க.
இடமில்லை, நேரமில்லை எனப்புலம்பி
அடுக்ககத்தில் பூனை வளர்க்க
அனுமதி தராத ஹவுஸ் ஓனரை
அவசரமாய்ச் சபித்தபடி,
"வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்"
ஈ பேப்பரில் பாரதியின்
கவிதை மட்டும் படித்துவிட்டு
பூனை ஆசைகள் மறைக்க முற்படினும்
டெஸ்க்டாப்பில் வாலாட்டி,
விண்டோஸின் ஸ்க்ரீன் பிறாண்டி,
அங்க சேஷ்டைகள் ஆயிரம் செய்து
அங்குமிங்கும் குதித்தோடும்
பப்பி அனுப்பிய
ஃப்ளோரசன்ட் பூனைக்குட்டிகள்
மூன்றை வைத்துத்தான்
கழிகிறது இப்போதைய பொழுது.
---------------------------------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
--------------------------------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கவிதை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்
--------------------------------

Friday, September 17, 2010

காதல் கவிதைகள்

("காதல் கவிதைகள் - தேஜூ உஜ்ஜைன்" என்ற தலைப்பில் யூத்ஃபுல் விகடனில் 2009 நவம்பர் மாதம் வெளியான கவிதைகள் இவை. )
--------------------------
எல்லோருக்கும் புத்தாண்டு
ஜனவரி 1ல் வருகிறது
உனக்கு மட்டும் ஏன்
பிப்ரவரி 14ல்
என்று கேட்கிறார்கள்

சொல்லிவிடவா அவர்களிடம்?
உன்னுடனான என் காதல்
பூத்த தினம்தான்
என் புத்தாண்டு என்று?
--------------------------
கல்யாண வீட்டின்
வாசலிலேயே
தயங்கி அமர்ந்துவிட்ட
என்னை
உள்ளே அழைக்கும்
அம்மாவிடம்
எப்படிச்சொல்வது?

உன்னை
நினைவுபடுத்திவிட்ட
ரோஜாக்களை
விட்டுவிட்டு
எப்படி வர
என்று...
--------------------------
என்னை வெறுப்பேற்ற
குழந்தையின் கன்னத்தில்
முத்தங்கள்
கொடுத்தாய் நீ...

ஆனால்
உனக்குத் தெரியாமல்
தன்
கன்னங்களை என்னிடம்
கொடுத்துப்போனது
குழந்தை...
--------------------------
உன்னுடனான
என் முதல் சந்திப்பில்
நான் சேர்த்து வைத்திருக்கும்
சின்னஞ்சிறு
வால் நட்சத்திரங்களை
உனக்குப் பிரத்யேகமாயப்
பரிசளிப்பேன்
ஒவ்வொரு முறையும்
எனைப்பார்க்க வருகையில்
எடுத்து வந்து
என் கனவில் நீ
விட்டுச்சென்றவை அவை.
--------------------------
விளையாடும் போது
அவ்வப்போது
திரும்பி எனைப்பாரேன்
அந்த கணப்பொழுதில்
எனைச் சுற்றியோர்
ஒளிவட்டம் தோன்றுவதாய்ப்
பிரமையேற்படுகிறது எனக்கு
----------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கவிதை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------