Thursday, February 24, 2011

நீ......















உன் அழகு நாசி விட்டு
வெளிவர மனமின்றி
உன்னுடனே தங்கிவிட்டது
நீ உள்ளிழுத்த காற்று...

"பணி மொழி வாலெயிறு ஊறிய நீர்"
தாகம் தீர்க்கும்
தன் கடன் மறந்து
வள்ளுவன் கூற்றாய்
உன் இதழ்க்கடை புகுந்தது நீர்.

நிலவினை முகத்திற்கும்
நட்சத்திரங்களை பற்களுக்கும்
தாரை வார்த்துவிட்டு
உன் கண்களில்
தஞ்சம் புகுந்தது ஆகாயம்..

வெம்மையைக் குறைத்து
உன் தேகமெங்கும் விரவி
இளஞ்சூடாய்க்
கதகதக்கிறது அக்னி...

தன்னுள் நீ கலக்கும்
கொடுமை வேண்டாமென்று
உன்னுள் கலந்து
ஊமையாகிப்போனது நிலம்...

கூடவே

நானும்...

Tuesday, February 15, 2011

காதல் - ஒரு குறைப் பிரசவக் குழந்தை




என் காதல்
ஒரு குறைப் பிரசவக் குழந்தை,

குழந்தை பிறக்கக் குறைந்தது
250 தினங்களேனும் வேண்டுமாம்.

ஆனால் உன்னைக் கண்டதும்
என் காதல் பிறந்து விட்டதே...

----------------

நீ
என்னிடம் பேசுவதை
உன் உதடுகளால்
தாங்க முடியவில்லையாம்.

நீ
என்னிடம் பேசும்
அந்த நேரத்தில்
அவை பிரிந்திருக்கின்றனவாம்.

என் உதடுகளை
சந்திக்கும் போது
அவை சொல்கின்றன.

ஆயினும்
அவற்றுக்குத் தெரியும்.........
இருவராய்ச் சந்திப்பதை விட
நால்வராய் சந்திப்பதே
இன்பம் என்று.

அதற்கான நன்றியையும்
சேர்த்தே சொல்கின்றன..

நீ என்னிடம் பேசிக்கொண்டே இரேன்
உன் உதடுகளை வம்பிழுக்க ஆசை.

----------------

ஒருநாள்
உன்னை நான் காதலிப்பதாகக்
காதலிடம் சொன்னேன்

உனைக்கண்டு விட்ட அது
என்னிடம் ஒத்துழைக்க மறுத்து விட்டது

காதலே உன்னைக்காதலிக்கிறதாம்.

----------------

Monday, February 14, 2011

ஃபீனிக்ஸ் ஜாதி (கவிதைகள்)


ஒரு வகையில்
ஃபீனிக்ஸ் ஜாதி தானோ
இந்தக் காதல்?
உதாசீனங்களைத் தாண்டியும்
இன்னும் இளமையாகவே
உயிர்த்தெழுந்து காத்திருக்கிறது
தனக்கான துணைக்காக.......
-------------------------------
எனக்கே எனக்கானவள் இவள்
என்றிருந்த போது
கவிதைகளால் குளிப்பாட்டினேன் அவளை..
அவள் ச்சோ...... ச்வீட் எனும்போது
கவிதை ச்சோ...... ச்வீட்டாவே இருந்தது..
அவளது விழியீர்ப்பு விசை
நோக்குமிடம் நானில்லை
என்று அறிந்த பிறகும்.....
அவளுடனான காதல்
இருக்கிறதா இல்லையாவென
யோசிக்கும் நேரத்திலும் வந்து
கவிதை கேட்கும் இவளை என்ன செய்வது?
-------------------------------
ரசிக்கப்படுகின்றன என்பதற்காகவே
உருவாக்கப்படுகின்றன பொய்கள்
அவள் ரசனைக்காக
என்னிடமிருந்து கொஞ்சம்...
பிழைத்துப்போகட்டும்
காதல்
-------------------------------
உற்சாகம் பொங்கும் மனதின்
மோன நிலை பிதற்றல்கள்
உண்மையல்லவென்று
பிதற்றுபவளுக்குத் தெரியாமலிருக்கலாம்..
செவிமடுப்பவன் செவிடனல்லவே.....
-------------------------------